செப்புப்பட்டயம்

நவம்பர் 7, 2008

அகிலா கதைகள் அறுபத்தைந்து

கோப்பு வகை: சிறுகதை, தொடர்கதை — kundavai @ 4:46 பிற்பகல்
Tags: , ,


“சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?”

அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.

“ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?”

“உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?”

“இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை”.

“ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?”

நான் மௌனமாயிருந்தேன்.

“பதில் சொல்லுங்க சார்.” கத்தினாள் மறுமுனையில்

“ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்.”

கேட்டவள் சிரித்தாள்.

“ஏண்டி சிரிக்கிற!”

அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு “உங்கக்கிட்ட ‘ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்’ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி.”

எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே “ம்ம்ம்” என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.

“என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.

சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.

சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி…”

சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

“…ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.

என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்.”

சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.

———————

Mohandoss’s new status message – பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
யாசித்தலின் குரூரம்
காதலாய் யாசிக்கிறேன்

* தொடர்கதையாக ஆக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஆகாது போலிருக்கு.

ஜூன் 24, 2008

தனித்தீவு(1) – Science Fiction

ரவிவர்மனுக்கு சில மாதங்களாகவே அவனுடைய வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாக தோன்றியது. அவனுடைய வாழ்க்கைமுறை சிலசமயம் ஆச்சர்யத்தையும் பலசமயம் கோபத்தையும் வரவழைத்தது. ஒரே மாதிரியான உணவு, உடற்பயிற்சி, இருபத்திநாலு மணிநேரமும் சக்திவாய்ந்த கேமிராக்களின் கண்காணிப்பு, கடந்த சில நாட்களாகவே அவனுக்கான அழைப்பு எப்பொழுது வருமென்ற ஏக்கம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

இருபத்திரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்த அணுஆயுதப்போரால் அழிந்த போன மனித சமுதாயத்தின் கடைசி சிலரில் ரவிவர்மனும் ஒருவன். பூமியின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோயும், சில பகுதிகள் உயிர்வாழமுடியாத அளவிற்கு கதிர்வீச்சு கொண்டதாகவும் இருந்ததால், அவன் தற்பொழுது சோதனைக்கூடத்தில் சக மனிதஜீவராசிகளின் மீதிகளுடன் வாழ்ந்துவருகிறான். சோதனைக்கூடம் அறிவியல் விஞ்ஞானிகளால் போர் நடந்தபொழுது உருவாக்கப்பட்டது, கதிர்வீச்சு தாக்கமுடியாதபடி கட்டப்பட்டது. இந்த சோதனைக்கூடத்தைப் போல் கதிர்வீச்சால் பாதிக்கப்படாத இடம் பூமியில் இருக்கும் ஒரே ஒரு தீவுமட்டுமே.

சோதனைக்கூடத்திலிருந்து அந்த தீவிற்கு செல்வதற்கு ஒரேயொரு சிறியவானூர்தி தான் அந்த சோதனைக்கூடத்தின் விஞ்ஞானிகளிடம் இருந்தது. அவர்களும் என்ன தான் செய்வார்கள். இந்த மிச்ச மீதிகளை வைத்து ஒரு சந்நதியை உருவாக்கும் முயற்சியை ஒரு ஆராய்ச்சியாக அந்த தீவில் செய்துகொண்டிருந்தார்கள். அந்த வானவூர்தியும் மிகச்சிறியது. ஊர்தியின் விமானிதவிர ஒரேயொரு நபர்மட்டுமே செல்லக்கூடியது. ஒவ்வொரு முறை சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு சென்று ஒரு மனிதனை விட்டுவிட்டு திரும்பவும் சோதனைக்கூடத்திற்கு வருவதற்குள் ஊர்தி பலத்த சேதத்திற்கு உள்ளாகிவிடும். அதைச்சரிசெய்து அடுத்த பயணத்திற்கு தயார் செய்ய பல மாதங்கள் பிடிக்கிறது சிலசமயம் வருடங்கள் கூட.

இப்படி சோதனைக்கூடத்திலிருந்து தீவிற்கு செல்லும் மனிதனை தேர்ந்தெடுக்க ஒருவகையான குலுக்கல் முறை அந்த விஞ்ஞானிகளால் கடைபிடிக்கப்படுகிறது. அந்த குலுக்கலில் வென்ற ஒருவர்மட்டும் தீவிற்கு செல்லலாம். ஆனால் அந்த குலுக்கலும் ஊர்தி சரிசெய்யப்பட்டதும் தான் நடத்தப்படும். இந்த முறை நடந்த குலுக்கலில் கூட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலிருந்தே ரவிவர்மனுக்கு வாழ்க்கையில் ஈடுபாடு குறைவதாகப்பட்டது. தீவிற்கு போவதற்கும் அங்கு வாழ்வதற்கும் அதிக மனதிடமும் உடல்திடமும் வேண்டுமாதலால், அவர்களுக்கான உணவும் உடற்பயிற்சியும் கட்டாயமானது அதே சமயம் ஆசைக்காக சாப்பிட முடியாமல் கட்டளைக்காக சாப்பிடவேண்டிய கட்டாயம் வேறு.

ஆனால் அவன் மனம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தற்போதைய அவனுடைய மனத்தளர்விற்கு ஒரு பெண்ணும் காரணம் அவள் பெயர் உஷா. அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் செல்லிற்கு அருகில் உள்ள செல்லைச் சேர்ந்தவள். அணுஆயுதப் போரின் விளைவால் அவர்களுடைய பழங்கால வாழ்க்கை நினைவில் இல்லை. அவனுக்கு இதற்கு முன்பு திருமணம் ஆகியிருந்ததா குழந்தைகள் இருந்தார்களா என்பதைப்பற்றிய ஒருவிவரமும் அவன் அறியவில்லை. ஆனால் சில மாதங்களாகவே உஷாவைப்பார்த்தால் அவள் அவனுடைய மனைவியைப் போல் இருக்கிறாள் என்பதைப் போன்ற ஒரு எண்ணம் அவன் மனதில் ஏற்படத்தொடங்கியிருந்தது.

உஷாவும் ரவிவர்மனிடம் நன்றாய்ப் பழகுவாள், விஞ்ஞானிகளின் கட்டளைப்படி அங்கு சோதனைக்கூடத்தில் வாழும் வரை எந்தவிதமான விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் தீவிற்கு செல்வதும் அங்கு சென்ற பிறகு மனித சமுதாயத்தை பெருக்குவதுமே அவனுக்கும் கொள்கையாயிருந்தது. சில வருடங்களாக இப்படி உணர்ந்ததில்லை, உஷாவிடம் அவன் பல மாற்றங்களை சில மாதங்களாக கவனிக்கத்தொடங்கியிருந்தான் அது தந்த பாதிப்பில் தான் கொள்கை காற்றில் பறக்கத்தொடங்கியிருந்தது. அது தந்த பயம்தான் அவன் வாழ்க்கையை சோர்வாக்கிக் கொண்டிருந்தது. அதாவது தான் குலுக்கலில் வென்று தீவற்கு சென்றுவிட்டாலோ இல்லை உஷா தீவிற்கு முதலில் சென்றுவிட்டாலோ என்ன செய்வது என்பதைப்பற்றி சிந்தித்தவனாய் மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். உஷாவிற்கும் ஒருவாறு ரவிவர்மனின் நோக்கம் தெரிந்துதானிருந்தது, அவளுக்கும் இது விருப்பமே ஆனால் விஞ்ஞானிகளை மீறி இதில் இறங்குவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. சில நாட்களாக இதைப்பற்றி உஷாவிடமும் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

“உஷா, நேத்திக்கு செல்க்ட் ஆன ஆண்ட்ரூவைப் பார்த்து பேசினியா?”

“ம்ம்ம் பேசினேன், அதிர்ஷ்டக்காரன் அவனுக்கு என்னைவிட ஐந்து வயது குறைவு தெரியுமா?” அவளுடைய பேச்சில் வருத்தம் தெரிந்தது.

“உஷா நீ தீவிற்கு போய்ட்டா என்ன மறந்துடமாட்டீயே” ரவிவர்மனுக்கே தான் கேட்ட இந்தக்கேள்வி ஆச்சர்யத்தையளித்தது. அதைவிட உஷாவிற்கு,

“என்னங்க இப்புடி கேட்டுட்டீங்க, நாம ரெண்டு பேரும் எவ்வளவு நாளா பழகிக்கிட்டிருக்கோம் உங்களைப்போய் மறப்பேனா?”

அவள் சொன்னாலும் நிஜம் அவனை யோசிக்கத்தான் வைத்தது. அவள் தீவிற்கு முதலில் சென்றால் சில மாதங்களிலிலோ, வருடங்களிலோ தானும் அங்கு செல்ல நேரலாம், இல்லை அங்கே தீவற்கே போகாமல் பல ஆண்டுகள் இங்கேயே கழிந்துபோகம்படியும் நேரலாம். அவனுக்கு ராமசாமித்தாத்தாவைப் பற்றித்தான் தெரியுமே அந்தப் பெரியவருக்கு 65 வயதாகிறது. இன்னும் குலுக்கலில் தேர்வு செய்யப்படாமலே இருக்கிறார். அதைப்போலவே நானும் இங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை நேர்ந்தால்? அவனுக்கு நிச்சயமாய் ஒன்று தெரியும் விஞ்ஞானிகள் எக்காரணம் கொண்டும் குலுக்கலில் தேர்வுசெய்யப்படாமல் தீவிற்கு அனுப்பமாட்டார்கள். பின்னர் வந்த இரண்டொறு நாட்களஇல் அவன் உஷாவிடமிருந்து விலகியிருக்க விரும்பினாலும் உஷாவாக வந்து பேச்சுக்கொடுத்தாள்.

சோதனைக்கூடத்திலே அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது இந்த தடவை நிகழ்ந்த தீவிற்கான பயணம். அதிகமாக கதிர்வீச்சிற்கு பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இரண்டே நாட்களில் அடுத்த குலுக்கல் நடைபெற்றது, எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்ததடவை ராமசாமித்தாத்தா தேர்வு செய்யப்பட்டார், அங்கிருந்த அத்துனை நபருக்கும் சந்தோஷமே தாத்தா தேர்வுசெய்யப்பட்டதில் அதைவிட சந்தோஷம் ஊர்தி கதிர்வீச்சில் பாதிக்கப்படாமல் திரும்பிவந்ததால் இது தொடர்ந்தால் இங்கிருக்கும் அனைவருமே சில வருடங்களஇல் தீவிற்கு சென்றுவிடமுடியும்.

ஆனால் ரவிவர்மனின் மனதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை தெரிந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் அவனை அழைத்துப்பேசினார்கள். பின்னர் அவனை சில மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று கூறி சோதனைக்கூடத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். இத்தனை வருடம் இங்கிருந்தாலும் அவன் அந்தப்பகுதிக்கு வந்ததேயில்லை. இரண்டொரு நாட்கள் அவன் அந்த உள்பகுதியில் தங்கியிருக்க நேர்ந்தது. அந்தச்சமயத்தில் அவன் தெரிந்துகொண்ட அவனைப்பற்றிய, அந்த சோதனைக்கூடத்தைப்பற்றிய, விஞ்ஞானிகளைப்பற்றிய, பூமியைப்பற்றிய ரகசியம் அவனுக்கு பைத்தியம் பிடிக்கச்செய்வதாயிருந்தது.

—————————-

இந்தக்கதை ஒரு ஆங்கில படத்தின் தழுவலில் எழுதப்பட்டது எனது போக்கிற்கு கதையை மாற்றியிருக்கிறேன். கான்சப்ட் மட்டுமே படத்தினுடையது. அடுத்த பதிவில் முடித்துவிட்டு படத்தைப்பற்றிய விமரிசனமும் தருவதாய் உத்தேசம்.

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.