கோவை பதிவர் சந்திப்பு – என் குறிப்புகள் (இரண்டாம் அமர்வு)

இரண்டாம் அமர்வு என்று போட்டாலும் விஷயம் ஆரம்பிப்பது, முதல் அமர்வின் முடிவிலிருந்து. சென்ஷி வாங்க கீழே போய்ட்டு வரலாம் என்று அழைக்க கிளம்பி கீழே வந்தோம். அங்கே உண்மைத் தமிழன், சுகுணா திவாகர், அவருடைய நண்பர், லிவிங் ஸ்மைல் வித்யா போன்றோர் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். நான் சுகுணா திவாகரை சென்னை வலைபதிவர் சந்திப்பில் சந்திப்பதற்கு முன்னமே தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அதனால் கொஞ்சம் போல் அறிமுகம் உண்டு.

நேரடியாக விஷயத்திற்கு இறங்கி பின்நவீனத்துவ படைப்புக்களை(கவிதைகளை) எழுதுவதோடு மட்டுமல்லாமல், சாதாரண(என்னை மாதிரி) மக்களுக்கும் புரியும் வகையில் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை விளக்கும் விதமாக பதிவெழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு உதாரணமாக ரமேஷ்-பிரேமின் பேச்சும்-மறுபேச்சும் புத்தகத்தைப் பற்றிச் சொல்லி அதுபோல நீங்கள் எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தேன். சுகுணா அவர்கள், பின்நவீனத்துவ ஜார்கன்’ஸ் இல்லாமல் எழுத முடியாது என்றும் முன்னமே சில பதிவுகள் இப்படி எழுதியிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். சென்ஷியும் கூட என்னமோ அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் என்னவென்று நினைவில் வரமறுக்கிறது.

செல்லா மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்ததால், அவருடைய நபர் எங்களை அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தார். ஆனால் சின்ன சின்ன குழுக்களாகப் பிரிந்து கௌதம் ஆர்கேட் வெளியில் பேசிக் கொண்டிருந்தார்களே ஒழிய யாரும் ஹோட்டலை நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை. பின்னர் வேறவழி நானே ஆரம்பித்து வைத்தேன் பயணத்தை. இந்தச் சமயத்தில் மேலிருந்து கீழே வந்த மா.சிவக்குமாருடனும் முகுந்துடனும் இணைந்து ஹோட்டலுக்குச் சென்றேன். பின்னர் தான் என்னிடம் மாட்டிக்கொண்டனர் இருவரும்; நான் போட்ட ரம்பத்தில் இரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.

முகுந்திடம் உபுண்டு உபயோகிக்க ஆசை இருப்பதாகவும் ஆனால் எங்கேயிருந்து தொடங்குவது என்றும் கேட்டேன். கம்ப்யூட்டர் உபயோகிக்கத் தொடங்கி இவ்வளவு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஒரு OS நானாக இன்ஸ்டால் செய்திராத ரகசியத்தைச் சொல்லி. என்னைப் போன்ற ஆட்களுக்கு உதவ எதாவது இணையத்தளம் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் உபுண்டு இணையத் தளத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்று கூறினார்.

பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் “அள்ள அள்ளப் பணம்” நன்றாகயிருக்கும் என்றார். தான் முதலில் கொஞ்ச காலம் நேரடி பங்கு வர்த்தகத்தில் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மியூட்சுவல் பண்ட் தான் என்று சொல்லி கொஞ்சம் பயப்படவைத்தார். நான் பருப்பு மாதிரி வாழ்க்கையில் எப்பவும் தான் ரிஸ்க் எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே இதிலும் எடுப்போம் என்று கூறினேன். மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.

திரும்பி வரும் வழியில் மா.சிவக்குமார் எஸ்கேப் ஆகிவிட முகுந்த், மற்றும் வித்யா பார்ட்னர்ஷிப்பில் வந்தேன். வித்யாவிடம் திருச்சியில் எந்தப் பக்கம் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன் பின்னர் முகுந்த் தான் பேச்சுலர்ஸ் மற்றும் மாஸ்டர் படித்த் “வரலாறை” எங்களிடம் சொன்னார். நாங்கள் மேலேறி வந்த பொழுது அங்கே குறைவான நபர்கள் தான் இருந்தனர், என் நினைவின் படி, சென்ஷி, உண்மைத் தமிழன், மா.சிவக்குமார், கோவை மணி, வினையூக்கி இவர்கள் தான் இருந்தனர்.

ஏற்கனவே முகுந்தையும் மா.சிவக்குமாரையும் ப்ளேடு போட்டு சக்க பார்மில் இருந்த என்னிடம் இந்த முறை மாட்டியது வினையூக்கி, சென்ஷி, அப்புறம் கோவை. மணி. வினையூக்கியிடம் எப்படிங்க உங்களால மட்டும் இத்தனை கதை எழுத முடியுதுன்னு ஒரு காலத்தில் எல்லோரும் என்னிடம் கேட்ட கேள்வியை நான் அவரிடம் கேட்க அவர் அந்த ரகசியத்தை விளக்கினார். நான் அவரிடம் பின்னர் ஏன் நீங்க இன்னும் நல்லா எழுதக்கூடாதுன்னு கேட்டதை மனிதர் ரசித்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். நான் என்னுடைய கனவான “ஒரு நல்ல சிறுகதை”க்கான அம்சங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று பதினைந்து நிமிடம் “உரை” நிகழ்த்தினேன். ஆனால் இதற்கெல்லாம் முன்னமே இந்த வரையறையை எல்லாம் நான் ஃபாலோ பண்ணுகிறேனா என்று கேட்கக்கூடாதென சொல்லியிருந்தேன்.

முடிக்கும் முகமாய் ஆபிதீன் எழுதிய “தினம் ஒரு பூண்டு” தான் இதுவரை நான் படித்ததிலேயே அதிகம் பிடித்த சிறுகதை என்று பில்டப் கட்டினேன். சிறுகதை மீதான என்னுடைய ஆசை காணாமல் போக்கும் பொழுதெல்லாம் அந்தக் கதையை ஒருமுறை படித்துவிட்டு இன்னும் நான் அந்தக் கதை பக்கத்தில் கூடவரவில்லையென்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு என்னை சமாதானம் செய்துகொள்வேன் என்று கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தேன். ஏனென்றால் உட்கார்ந்திருந்த மூவரும் அந்தக் கதையை படித்திருக்கவில்லை.

இடைமறித்த சென்ஷி, ஒரு விஷயம் எழுதுறீங்கன்னா நாலு பேருக்கு போய்ச் சேரணும்னு நினைக்க மாட்டீங்களா என்று கேட்டார் நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு எத்தனை ஹிட்ஸ் வருகிறதென்றும் கேட்க நான், எனக்காகத் தான் நான் எழுதுகிறேன் என்றும் மற்றவர்கள் படிப்பதை படிக்காமல் இருப்பதைப் பற்றி கவலைப் படுவதில்லை என்று சொன்னேன். பின்னர் எப்படியோ விஷயம் பக்கத்தில் “பாரதியை” பற்றி எழுதியிருந்த விஷயத்திற்கு வந்தது. லக்ஷ்மி அதில் நான் ஒரு முன்முடிவுடனேயே விவாதத்தில் இறங்குவதாக சொல்லியிருந்ததை நினைவுபடுத்திய சென்ஷியிடம். ஆமாம் நான் சரி என்று தீவிரமாக நம்பும் ஒரு விஷயத்தைப் பற்றித்தான் எழுதமுடியுமே தவிர, நான் தவறு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனால் சரியென்று ஒருவிஷயத்தை என்னால் எழுத முடியாதென்றும் அதனால் முன்முடிவுகளை மறுக்கமுடியாதென்றும் சொன்னேன்.

பாரதியின் திருமணத்தைப் பற்றி முன்னம் பதிவில் பின்னூட்டம் போட்டிருந்ததையே இன்னொரு முறை சொன்னேன். நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மா.சிவக்குமார் நான் மெஷின் போல் பேசுவதாக கம்ப்ளெய்ண்ட் செய்தார்.

பின்னர் அப்படி இப்படி என அடுத்த அமர்வு தொடங்கியது. முகுந்த் எ-கலப்பை, தமிழ்விசை, அதியன், மீபோ பற்றிய நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்தார். எப்படியென்றால் தீவிர இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஃபேன் ஆன நான் தற்சமயம் பயர் பாக்ஸில் உட்கார்ந்து டைப் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் காரணம் அவருடைய செஷன் தான். பத்திரிக்கையாளர்களோ இல்லை வீடியோ எடுப்பவர்களோ இல்லாததால் என்னமோ ரொம்பவும் பழகியவர்கள் சொல்லித்தருவது போலத்தான் இருந்தது.

இடையிடையில் என்னுடைய தேவை காரணமாக வெளியில் சென்று சென்று வந்துகொண்டிருந்தேன். முகுந்த் முடித்ததும் சிவக்குமார் Joel on software பற்றி ஆரம்பித்தார்; சொல்லப்போனால் வலைபதிவு கன்டென்ட் எப்படி இருக்கலாம் என்பதைப் பற்றித் தான் பேசினார் என்று வைத்துக்கொள்ளலாம். நான் ரொம்ப காலமாக ஜாவாவில் ப்ரொக்கிராம் எழுதுவதைப் பற்றி, ப்ரோஜெக்ட் செய்வதைப் பற்றி, இன்டர்வியூவிற்கு பிரிபேர் செய்வது பற்றி தமிழில் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதை ஒரு தொடக்க நிலையிலாவது கொண்டுவந்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறேன்.

பின்னர் பாலபாரதி வீடியோ கான்ப்ரன்ஸ் செய்ய முயற்சிகள் தொடங்க, பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த மா.சிவக்குமார் “ழ” கணிணியில் இருந்தவர் என்பதால் எனக்கு இருந்த சில கேள்விகளைக் கேட்டேன் அவரும் “அரசியல்” எதுவும் இன்றி விளக்க்கினார். நண்பர்களுடன் இன்னும் உரையாட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருந்தாலும்(;)) நான் செய்து கொண்டிருந்த அரேஞ்மென்ட்கள் அதற்கு உதவாததால். சிறில் அலெக்ஸுடன் மற்றவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுதே நான் கிளம்ப வேண்டி வந்தது.

இவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

* சென்ஷி நிறைய சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை அவரிடமும் சொன்னேன். ஆளு ரொம்ப நரம்பாயிருக்கிறாரு.

* வினையூக்கி ரொம்பவும் தீவிரமாக எல்லோரும் பேசுவதை கவனித்து வருகிறார்.

* மா.சிவக்குமார் ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்காக இருக்கிறார். பழகுவதற்கு இனிய மனிதர்; ப்ரொபைலில் இருக்கும் படத்தில் ஏன் கண்ணாடி இல்லாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. கண்ணாடியுடன் இருக்கும் பொழுது இன்னும் பிரகாசமாகயிருக்கிறார்.

* பாலபாரதி ஒரு இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தார். அவர் ரூமிற்குள் உட்கார்ந்திருந்த நேரம் குறைவாகத் தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

* பாமரன் ரொம்பவும் ப்ராக்டிகலான ஆளாகயிருப்பார் என்று நினைக்கிறேன். ஸ்பாண்டேனியஸ்ஸாக அவர் அடிக்கும் கமெண்ட்கள் நன்றாகயிருக்கின்றன.

* உண்மைத் தமிழன் ரொம்பவும் மெதுவாகப் பேசுகிறார், இதை வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன். இங்கே பதிவெழுதும் ஆளுக்கும் சந்திப்புக்களில் பார்க்கும் ஆளுக்கும் எனக்கென்னமோ வித்தியாசம் இருப்பதாகப்பட்டது.

* ராஜாவனஜ் மதியம் முகுந்த் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கடைசி பெஞ்ச் மாணவன் போல் தூங்கிக்கொண்டிருந்தார். நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் அதை.

* முகுந்த் துறுதுறுவென இருக்கிறார் எறும்புகள் குழுவில் இருந்த பழக்கமோ தெரியாது. இவரை நிறைய எழுதச் சொல்லி வற்புறுத்தினேன்.

* செல்லா மற்றும் இன்னும் சிலரை பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு.

13 thoughts on “கோவை பதிவர் சந்திப்பு – என் குறிப்புகள் (இரண்டாம் அமர்வு)

  1. //நான் அவரிடம் பின்னர் ஏன் நீங்க இன்னும் நல்லா எழுதக்கூடாதுன்னு கேட்டதை மனிதர் ரசித்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.//

    Nanba,

    Neengal Sonnathai naan kavanithil eduthukondaen. Innum nalla eluthikiren.

    Anbudan
    Vinaiooki

    (Sorry, No keyman)

  2. //* உண்மைத் தமிழன் ரொம்பவும் மெதுவாகப் பேசுகிறார், இதை வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன். இங்கே பதிவெழுதும் ஆளுக்கும் சந்திப்புக்களில் பார்க்கும் ஆளுக்கும் எனக்கென்னமோ வித்தியாசம் இருப்பதாகப்பட்டது.//

    ஓ.. அப்ப வந்தது போலியான உண்மைத்தமிழனாக்கும்..?

    சாமிகளா நீங்கள்லாம் தனியா மாட்டிருக்கணும்.. ஒரு நாள் இருந்து என்கூட மருதமலைக்கு வந்திருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும் நான் ஆருன்னு..?

    சரி.. சரி.. எப்படியோ நம்மளைப் பத்தி ஒரு பிட்டாச்சும் போட்டிருக்கீக.. அங்கனயும் மறக்கமா இருங்க.. இந்தப் பக்கமா வந்தா ஒரு போன் அடிங்க.. ஓடி வந்து பாக்குறேன்.. தேங்க்ஸ¤ங்கோ..

  3. வினையூக்கு, புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    //சாமிகளா நீங்கள்லாம் தனியா மாட்டிருக்கணும்.. ஒரு நாள் இருந்து என்கூட மருதமலைக்கு வந்திருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும் நான் ஆருன்னு..?//

    உண்மைத் தமிழன். வருத்தப் படுகிறேன் இல்லாமல் போனதற்கு இன்னொரு தடவை பெரிய ஏற்பாட்டுடன் வருகிறேன். அப்பொழுது வைத்துக் கொள்ளுவோம்.

  4. ஆபிதீன் எழுதிய “தினம் ஒரு பூண்டு”
    சிறுகதையைப் பதிவிட்டால் நாங்களும்
    படிக்கமுடியுமே!

    பதிவிற்கு நன்றி!

  5. // நான் போட்ட ரம்பத்தில் இரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். //

    // மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. //

    Umma kooda blogger cricket velaiyadalamnu irunthen! :)))

  6. சிவஞானம்ஜி சிந்தாநதி கொடுத்திருக்கும் லிங்கில் படிக்கலாம்.

    நன்றி சிந்தாநதி.

    இளவஞ்சி அய்யா(மூத்த வலைபதிவர்களை அப்படித்தான் அழைப்பது)

    இதெல்லாம் சரியில்லை, அப்புறம் நான் எப்படி உங்களுக்கு ப்ளேட் போடுவது. இதைப் பற்றி தனியாகப் பேசுவோம் என்ன 😉

  7. //எப்படியென்றால் தீவிர இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஃபேன் ஆன நான் தற்சமயம் பயர் பாக்ஸில் உட்கார்ந்து டைப் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் காரணம் அவருடைய செஷன் தான்.//
    நீங்கள் ஃபயர்பாக்ஸ்க்கு மாறியது மகிழ்ச்சி 🙂

    நீங்க நிகழ்ச்சியில் எடுத்த வீடியோவை யூடியூப் அல்லது வேறு இடத்தில் வலையேற்ற முடியுமா?

  8. முகுந்திடம் உபுண்டு உபயோகிக்க ஆசை
    ஆசையா?
    இங்கு தட்டவும்.படத்துடன் விளக்கம் உள்ளது.
    வெறொன்றும் இல்லை அது என் பதிவு தான்.

  9. ரவி நன்றிகள் முயற்சி செய்து பார்க்கிறேன்.

    முகுந்த் தொடர்ச்சியாக பதிவிடலாம் என்று நினைத்திருந்தவன். இப்பொழுது போட்டு விடுகிறேன்.

    குமார் – உங்களைப் பற்றியும் சொன்னார்கள், அப்படியே உங்கள் வலைத்தளத்தைப் பற்றியும். யூஸ் செய்து கொள்கிறேன்.

  10. //மா.சிவக்குமார் நான் மெஷின் போல் பேசுவதாக கம்ப்ளெய்ண்ட் செய்தார். //

    அதை வெளிப்படையா சொன்னேனா என்ன? மனதில் மட்டும் திட்டியதா நினைத்துக் கொண்டிருந்தேன் :-). (இப்போது என்ன பேசினோம் என்பது கூட மறந்து போகிறது :-()

    //அதை ஒரு தொடக்க நிலையிலாவது கொண்டுவந்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறேன்.//

    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    //கண்ணாடியுடன் இருக்கும் பொழுது இன்னும் பிரகாசமாகயிருக்கிறார்.//

    சொல்லிட்டீங்களா, இனிமேல் புது புகைப்படம் பிடிச்சுப் போட வேண்டியதுதான் 🙂

    அன்புடன்,

    மா சிவகுமார்

  11. மா.சி.

    தெரிஞ்சிக்கங்க என்னைப் பத்தி மனசில திட்டினாக்கூட எனக்குக் கேட்டிரும் அதனால ஜாக்கிரதை.

    வலையுலகத்திற்கு வந்ததில் இருந்து உருப்பிடியா ஏதாவது செய்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

    கண்ணாடியோட படம் எடுத்துப் போடுங்க ஓய் நல்லாயிருக்கும் :).

siva gnanamji(#18100882083107547329) -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி